Breaking
Fri. Dec 5th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிகவும் வேகமாகவும் காரசாரமாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேடைகளில் பேசுகின்றார். வானொலியில் அதனை நான் கேட்டேன். மிகவும் கோபத்துடன் பேசுகின்றார். மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளுமாறு அவரிடம் நான் கூறுகின்றேன். யாரையும் வெறுக்க வேண்டாம். எவருடனும் குரோதமாக இருக்க வேண்டாம். மக்களின் கண்களை அன்புடன் பாருங்கள். நீங்கள் மேற்கொண்ட தவறுகள் உங்கள் பின்னால் வருவதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தற்போது எழுந்துள்ள மக்கள் சக்திக்கு நீங்கள் தலைசாய்க்க வேண்டும். வன்முறையால் வெற்றிபெற முடியாது. எப்படியாவது வெல்வதாக அவர் கூறுகின்றார். எதனையாவது செய்து வெல்வதாகக் கூறுகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் குழுவினருக்கும் ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு வெற்றியீட்டுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. போலி வாக்குகளைப் போடுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இவை அனைத்தையும் நாம் பார்த்துக்கொள்வோம்.” என்றுள்ளார்.

Related Post