அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம் – செயலாளர் சுபைர்தீன்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும்  ஏ.கே.அமீர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக, அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும்” எனவும் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.