‘இலங்கைக்கு ஆதரவளித்தமை சரியே’

இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கெதிராக உலக வல்லரசு நாடுகள் பல ஒன்றாகக் கூடியபோது, அந்தக் கூட்டணியில் இணைவதிலிருந்து அவுஸ்திரேலியா தள்ளியிருந்ததோடு, இலங்கையோடு நெருங்கிச் செயற்பட்டிருந்தது. அப்போது, அவுஸ்திரேலியாவின் பிரதமராக டொனி அபொட்டே செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் பத்தியொன்றை எழுதியுள்ள டொனி அபொட், ‘இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் எடுக்கப்பட்ட கடுமையான, ஆனால் அனேகமாகத் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளுக்கெதிரான மனித உரிமைகள் குழு’க்களோடு இணையாமையை நியாயப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அபொட்டின் காலத்தில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்பட்ட நெருக்கமான உறவில், படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்பவர்களைக் கட்டுப்படுத்துதல் முக்கியமானதாக அமைந்திருந்தது. எனினும், அந்த நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்திருக்கலாம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

படகுகளைத் தடுத்து நிறுத்தும் செயற்பாடு, அதிகாரத்து அப்பாற்பட்டது எனச் சிலரும் அவுஸ்திரேலியாவுக்கும்
இந்தோனேஷியாவுக்குமிடையிலான உறவைப் பாதித்தது எனச் சிலரும் தெரிவித்த போதிலும், அதை நியாயப்படுத்திய அபொட், ‘படகுகளை நிறுத்த வேண்டிய தேவை, அரசாங்கத்துக்கு இருந்தது. எங்களது தேசிய நலனும் ஒரு நாடாக எங்களது சுய மரியாதையும் அதை வேண்டி நின்றது’ எனத் தெரிவித்தார்.