175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது.
1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது.
இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை புதிய முத்திரையாக மீள வெளியிட இலங்கைத் தபால் திணைக்களம் முடிவெடுத்துள்ளது.
இலங்கை முத்திரைப் பணியகத்தால் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள இந்த முத்திரையின் பெறுமதி பத்து ரூபா என்று தெரிய வந்துள்ளது.