வரவு செலவுத்திட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது! பாலித

அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை நன்மையானது என்றோ தீமையானது என்றோ கூற முடியாது. எனினும் மக்கள் எதிர்பார்த்த சலுகைகள் நிவாரணங்கள் இதில் கிடைக்கவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை கிரமமான முறையில் மேற்கொள்ள வழியமைக்கப்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறை சார் சமூகம் எதிர்பார்த்த நன்மைகளும் நலன்களும் கிடைக்கவில்லை. இதனை விடவும் அதிகளவான நிவாரணங்களை மக்கள் எதிர்பார்த்தனர்.

மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

திருப்தி அடையக் கூடிய வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை என பாலித தெவரப்பெரும சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்ப்பதா, வாக்களிக்காமல் விடுவதா என்பது குறித்து பாலித தெவரப்பெரும எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.