சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் விடயத்தில் அவசரம் காட்டப்படாது!- ஜனாதிபதி

மனித உரிமை மீறல் தொடர்பில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தெ ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது இல்லத்தில் வைத்து ஹிந்துவுக்கு செவ்வியளித்த அவர்,

முதலில் போரில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னரே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை அரசாங்கம் இதனை செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. எனினும் அரசாங்கம் தேவையான அனைத்தையும் மேற்கொள்ளும்.

இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க மற்றும் ஒரு அமைப்பு செயற்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் எதிர்வரும் 9ம் திகதியன்று மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது அனைத்து தரப்பினரின் வாதவிவாதங்களும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்.

இந்தியாவின் உதவியுடனான 13வது அரசியலமைப்பின் நடைமுறை குறித்து கருத்துரைத்த அவர், வாதவிவாதங்களின் பின்னர் அதனை புதிய அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் நீண்ட வரலாறு இலங்கையில் உள்ளது. எனினும் உரிய ஆய்வின் பின்னர் புதிய அரசியலமைப்பில் அது உள்வாங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாற்றங்களை விரும்பிய உலக தலைவர்களான ஆபிரகாம் லிக்கொன், மார்டின் லூதர் கிங் ஜூனியர், மகாத்மா காந்தி மற்றும் எஸ் டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்க ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இதில் இருந்து மனிதநேயத்துக்கு எப்போதும் எதிர்ப்பு இருப்பது தெரிகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது மிகச் சிறந்த நண்பர் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.