Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல் சாசனத்தில் வழிசெய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்ட்டுள்ளது.

புதிய அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க காத்திரமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அப்படியான சம்பவங்கள் மீதான விசாரணைகளை விரைவாகவும் கௌரவமான முறையிலும் முன்னெடுக்க நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் படம் ஒரு இனத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும்,அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தேசியக் கொடியின் வடிவமைப்பு இருக்கவேண்டும் எனவும் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்ற மகளிர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

அரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, தேசியப் பட்டியல் நியமனத்தில் 30% இடங்கள் பெண்களுக்கு அளிக்கபப்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. – BBC –

By

Related Post