போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வருடம் முதல் புதிய வடிவில்!

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார்.
போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையதும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார்.

நேற்று (11) முற்பகல் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இன்று எமது நாட்டு மக்கள் மிக ஆபத்தான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருப்பதோடு, இலங்கையின் சனத்தொகையில் 45,000 பேர்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர். இலங்கையில்  சிகரெட் பயன்படுத்துபவர்களில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

2015 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 23.4 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளிலிருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 7 ஆவது நிகழ்ச்சித் திட்டம் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெற்றதுடன், மாவட்டத்தின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.