Breaking
Thu. May 9th, 2024

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கேள்வி!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இன்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது 275 சதொச கிளைகளே இயங்கின. எனது பதவிக்காலத்தில் அவற்றை 400 ஆக அதிகரித்து, இந்த நிறுவனத்தை இலாபகரமானதாக ஆக்கினேன். கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் இயங்கிய சதொச கிளைகள் திட்டமிட்டு மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 35௦௦௦ ரூபா சம்பளத்தில் இவர்கள் வெளிமாவட்டங்களில் எவ்வாறு பணிபுரிய முடியும்? தமிழ், முஸ்லிம் என்பதனாலா இவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர்? எனவே, மூடப்பட்டுள்ள சதொச கிளைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வர்த்தக வாணிப அமைச்சர் நளின் பெர்னாண்டோ, “நீங்கள் சொல்வது முற்றிலும் சாதாரணமானதும் நியாயமானதும் கூட. இருப்பினும், நிறுவனத்தின் இலாபத்தையும் கருத்திற்கொண்டு, அவற்றை மீளத் திறக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

Related Post