சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை எதிர்வரும் புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, புராதன சின்னங்களை மையினால் எழுதிய குற்றஞ்சாட்டின் கீழ் குறித்த மாணவி தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த மாணவி, புராதன சின்னங்களை மையினால் எழுதியதாக சீகிரியா பொலிஸாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் தங்களோடு சுற்றுலா வந்த மாணவியை விடுவித்தால் மாத்திரம்தான் பொலிஸ் நிலையத்தைவிட்டு நகருவோம் என்று மாணவிகள் பொலிஸ் நிலையம் முன்பாக அன்று போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து குறித்த சிறுமியினை விடுவிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இதனையடுத்து நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சீகிரிய பிரதேச அரசியல் பிரமுகரும், அப்போதைய காணி அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோன் மற்றும் அப்போதைய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோரின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கொண்டுசென்றார்.
எனினும் அவர்களினால் குறித்த மாணவியை விடுதலை செய்ய முடியாததனை அடுத்து அப்போதைய அரசாங்கத்தின் பலம் பொருந்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் இவ்விடயத்தில் தலையிட்டு பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சீகிரியாவுக்கு அனுப்பினார்.
இதனையடுத்து குறித்த மாணவி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தாது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீகிரியா குன்றின் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த உதயசிறி எனும் யுவதியொருவரை கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சீகிரியா ஓவியத்தின் மீது 10 அல்லது 12 எழுத்துக்களில் தனது பெயரை எழுதிய இந்த யுவதிக்கு கடந்த மார்ச் 2ஆம் திகதி தம்புளை நீதவானினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவயினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

