Breaking
Mon. Dec 15th, 2025

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார்.

வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில் ஏறாமல் ஆஜராகும் ஞானசார தேரரை இன்று குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் குற்றவாளி கூண்டில் இருந்தவர்களிடம் நீதிபதி வழமையை விட இன்று கடுமையாக நடந்து கொண்டதாகவும் இவ்வழக்குக்கு ஆஜரான சட்டத்தரணி ஷிராஸ் நூர்தின் தலைமையிலான குழு தெரிவித்தது.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அனுமதியை போலீசார் கேட்டபோது,அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related Post