சுதந்திரக் கட்சியை நான் விரும்பி மைத்திரியிடம் ஒப்படைக்கவில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கைச்சின்னமும் வெறும் கட்டிடம் அல்ல எனவும் மக்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் தான் அந்த இடத்திலேயே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பில் போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏன் ஒப்படைத்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.

உண்மையில் நான் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை கூட்டப்பட்டது.

கூட்டம் ஆரம்பிக்கும் போது 30 பேர் இருந்தனர். இறுதியில் 15 முதல் 20 பேரே அங்கு இருந்தனர்.

அங்கிருந்தவர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைய தீர்மானித்தனர். அன்று நிறைவேற்றுச் சபைக்  கூட்டம் முடியும் போது எஞ்சியிருந்தவர்கள் கட்சியினரை பாதுகாக்க, கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.

அதனடிப்படையிலேயே நான் கட்சியின் தலைமைத்துவத்தை அவரிடம் ஒப்படைத்தேன் என முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.