Breaking
Tue. May 14th, 2024

மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“மர்ஹூம் இக்பால் ஹாஜியார் அவர்கள் முசலி பிரதேச சபையின் உறுப்பினராகவும் சமூர்த்தி அதிகாரியாகவும் இருந்து, அந்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பணிபுரிந்தவர். முசலியின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், புத்தளத்திலும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் முசலி மக்களை, மீண்டும் தத்தமது வாழ்விடங்களில் குடியேற்ற வேண்டுமென்ற அக்கறையுடன் உழைத்தவர்.

முசலிப் பிரதேசத்தில் உள்ள கொண்டச்சி, மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களில் வாழ்ந்த மக்களின் காணிகள், பல்வேறு காரணங்களினால் கையகப்படுத்தப்பட்ட போது, அதற்காக முன்னின்று போராட்டம் நடத்தியவர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து கட்சிக்கும் தலைமைக்கும் விஸ்வாசமாக செயற்பட்ட அவர், பல அபிவிருத்திப் பணிகளில் பக்கபலமாக நின்று பாடுபட்டவர்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காலமான அன்னாரின் மறைவால் துயருறும் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அவருக்கு வழங்குவானாக..! ஆமீன்..!”

Related Post